பிக்கி

 


சிறிய கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார் கமலியின் தாத்தா. அவரது வீட்டில் அழகான ஒரு பன்றிக் குட்டியை வளர்த்து வந்தார். அவருக்கு துருவன், கமலி என இரண்டு பேரக் குழந்தைகள். இருவரும் பன்றிக்குட்டிக்கு பிக்கி எனப் பெயர் வைத்தனர்.

துருவனும் கமலியும் பிக்கியோடு விளையாடுவார்கள். பிக்கி சேட்டைக்காரி. தோட்டத்தில் எல்லாச் செடிகளையும் தோண்டித் தோண்டி சாய்த்து விடுவாள். வீட்டுக்குள் நுழைந்து கமலியின் விளையாட்டுப் பொருட்களை உடைப்பாள். துருவனின் செருப்புகளை எங்காவது கொண்டு போய் போட்டு விடுவாள்.

எல்லோரும் சாப்பிட தாத்தா கிழங்கு வாங்கி வருவார். யாருக்கும் தெரியாமல் எல்லாக் கிழங்குகளையும் பிக்கி தின்று விடுவாள். பிக்கியின் சேட்டைகளை தாத்தாவிடம் சொன்னார்கள் துருவனும் கமலியும்.

“அவள் என் பொருள்களை எதுவும் செய்வதில்லை. அவள் எனக்கு உங்களைப் போல் செல்லம்தான்.” என்றார்.

பால் வியாபாரத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் தாத்தா. பாத்திரங்களில் பாலை நிரப்பி மூடி வைத்தார். சட்டை போட்டு வருவதற்குள், ஒரு பாத்திரத்தில் இருந்த பால் கீழே ஊற்றிக் கிடந்தது. 

தாத்தாவிற்குக் கோபம் வந்தது. பிக்கியை தோட்டத்து பாதாம் மரத்தில் கட்டிப் போட்டார். பிக்கிக்கு ஒன்றும் புரியவில்லை. பிக்கி தனியாக அழுதது. சத்தம் போட்டது. துருவனும் கமலியும், “ஐ… ஜாலி… ஜாலி… ஓ… ஜாலி… ஜாலி…” என்று பிக்கியைப் பார்த்துச் சிரித்தனர்.

தாத்தா வீட்டிற்குள் சென்றார். இன்னொரு பாத்திரத்தை கீழே தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது வெள்ளை நிறப் பூனை. தாத்தா வேகமாக நடந்து சென்று பிக்கியை அவிழ்த்துவிட்டார். பிக்கி வேகமாகப் பூனையைத் துரத்தியது. துருவனும் கமலியும் தாத்தாவைப் பார்த்து நின்றனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசம்

இருபத்தியோராம் நூற்றாண்டின்  அழகி.!

தலைக் கவிழ்ந்த சிங்கம்