தெவசம் - 4
இ லுப்பை மரங்களிலிருந்து வெளவால்களின் சத்தம். செங்கல் கால்வாய் வேலை முடித்து இரவு உணவுக்கு அடுப்பேற்றியிருந்தனர் பணியாட்கள். கோழிகளை கூட்டுக்குள் அடைத்தும் சேவல்களைக் கூடையிலும் கவிழ்த்துக் கொண்டிருந்தார் வடவாத்தங்கரையாரின் அம்மா செல்லபாங்கி. பங்காளி வீடும் இவர் வீடும் இணைந்து சுத்துக்கட்டு வீடாய் இருந்தது. கருப்பஞ் சோகையால் வேயப்பட்ட உயரமான திண்ணையுள்ள வீடு. மண் சுவற்றில் ஆங்காங்கு அடுக்குத் தேனிகளின் கூடு. முன்பக்க மாடத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குள் விசும்பிக் கொண்டிருந்தாள் வடவாத்தங்கரையாரின் மனைவி வசந்தா. "வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம ஒன்னு கெடக்க ஒன்னு சொல்லப் போயி, அழச்சிட்டு பூட்டாங்க... நான் ஆர போயி புடிப்பேன். எப்படி கொண்டாருவேன்." என்றவள், பிள்ளைகளை மடியில் கிடத்தி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். "சோத்துல தண்ணி வூத்துட்டா... திங்கிறீங்களா" எனக் கோழிகளைக் கவிழ்த்துவிட்டு வந்து கணவரைப் பார்த்துக் கேட்டார் செல்லபாங்கி. "இவுனுவோ பாட்டுக்கு செவனேன்னு ஆக்கி எறக்குனத தின்னுக்கிட்டு பொழப்ப பாக்க வேண்டிதான. எதுக்கு இந்த வம்...