கட்டெறும்பின் படகு சவாரி
கட்டெறும்பு ஒன்று ஓர் மரத்தின் அடியில் நின்று யோசனை செய்து கொண்டிருந்தது. குரங்கைப் போலத் தாவிக் குதித்து விளையாட ஆசைப்பட்டது. கிளியைப் போல பறக்க நினைத்தது.
ஒருமுறை, தவளை ஒன்று “படகு சவாரி போகலாமா” எனக் கட்டெறும்புவிடம் கேட்டது. அதற்குக் கட்டெறும்பு, “படகு என்றால் எப்படி இருக்கும்” எனக் கேட்டது. “அதோ தூரத்தில் ஒரு ஏரி தெரிகிறது பார். அந்த ஏரிக்கு மீன் பிடிக்க படகில்தான் வருவார்கள். நான் ஒருமுறை அதில் ஏறி சவாரி செய்தேன். எனக்கு ஜாலியாக இருந்தது.” என்று தவளை சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டது. கட்டெறும்புக்கு படகில் சவாரி செய்ய ஆசை வந்துவிட்டது.
ஒருநாள், கட்டெறும்பு தவளையைத் தேடி அலைந்தது. எங்கு தேடியும் தவளை கிடைக்கவில்லை. அங்கு ஒரு ஆறு ஓடியது. அதன் அருகே சென்ற கட்டெறும்பு, படகு வருமா எனப் பார்த்து நின்றது. அங்கு படகு வரவில்லை. தூரத்தில் ஆறு தொடங்கும் அந்தப் பெரிய ஏரி தெரிந்தது. அங்கு சிலர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கட்டெறும்பு, அதில் ஏறிப் பயணிக்க நினைத்து அங்கு எப்படி செல்வது எனத் தெரியாமல் சோகமாக நின்றது.
அப்போது அங்கு வந்த ஆமை ஒன்று, கட்டெறும்பின் ஆசையைக் கேட்டுத் தெரிந்து கொண்டது. தன் முதுகின் மீது கட்டெறும்பை ஏற்றி ஆற்றில் பயணம் செய்தது.
“ஆறு எங்க ஆறு
அழகான ஆறு
ஆமையாரின் மீதிலே
பயணம் செய்வது யாரு
படகு சவாரி சென்றிடும்
கட்டெறும்பு பாரு!” எனக் கரையில் நின்று தவளைப் பாடிக் கொண்டிருந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக