சந்தைக்குப் போன கயல்
கயல் தன் அம்மாவோடு சந்தைக்குச் சென்றாள். அங்கு வகை வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் எனக் குவிந்து கிடந்தன. ஒரே கடையில், பீட்ரூட், கேரட், வெண்டைக்காய், கத்தரிக்காய் இருந்தன.
கயல் ஒரு பீட்ரூட்டை கையில் எடுத்தாள்.
“பாப்பா… நான் பேசுறது கேக்குதா…”
கயல் தன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அம்மா, காய்கறிகள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார். கயல், கேரட் ஒன்றையும் எடுத்துப் பார்த்தாள்.
“பாப்பா… நான் பேசுவதாச்சும் கேக்குதா…”
கயல் இம்முறை காய்கறிக் கடைக்காரரைப் பார்த்தாள். அவர் காய்கறிகளை எடை போடுவதில் கவனமாக இருந்தார்.
“பாப்பா… உன் கையில்தான் இருக்கிறோம். நாங்கள்தான் பேசுகிறோம்” என பீட்ரூட்டும் கேரட்டும் சொன்னது.
கயல் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்னை வாங்கினால், உனக்கு நிறைய சத்துகளைத் தருவேன். எனக்குதான் அதிகச் சத்துகள் உள்ளன.” என்றது பீட்ரூட்.
“எனக்குதான் அதிகச் சத்துகள் உள்ளன. என்னை நீ கழுவிவிட்டு அப்படியே கூடச் சாப்பிடலாம்.” என்றது கேரட்.
“இவர்களை விட நான் உனக்கு அதிகச் சத்துகளைத் தருவேன். ஹா… ஹா…” எனச் சிரித்தது வெண்டைக்காய்.
“என் அம்மாவிடம், உங்கள் மூன்று பேரையும் வாங்கச் சொல்கிறேன். சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்” என்றாள் கயல். அங்கு அழும் விசும்பல் சத்தம் கேட்டது. கயல் சுற்றும் முற்றும் பார்த்தாள். கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் மூவரும் சிரித்துக் கொண்டிருந்தன.
“யார் அழுவது, நீங்க ஏன் சிரிக்கிறீங்க” என்றாள்.
“கத்தரிக்காயும் எங்களோடுதான் சந்தைக்கு வந்தது. அதை யாரும் வாங்கவில்லை என அழுகிறது.” என்றது வெண்டைக்காய்.
“அதற்காகச் சிரிப்பீங்களா… உங்களை மாதிரி அதுவும் சத்துகளைத் தரும் தானே…” எனச் சொல்லிவிட்டு கத்தரிக்காயை முதலில் வாங்கச் சொன்னாள்.
கயலிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, கத்தரிக்காயிடமும் மன்னிப்பு கேட்டன பீட்ரூட்டும் கேரட்டும் வெண்டைக்காயும்.

கருத்துகள்
கருத்துரையிடுக